ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றி ‘மிகப்பெரிய வாழ்க்கைப் பாடம்’..! பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பின்னடைவு கண்டு பிறகு போராடி எழுச்சி பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றிய இந்திய அணியின் வரலாற்று வெற்றி ‘மிகப்பெரிய வாழ்க்கைப் பாடம்’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்டில் படுதோல்வியடைந்த பின்னும் மீண்டெழுந்து டெஸ்ட் தொடரை வென்றது. இந்திய அணி வெற்றி பெற்றதுமே டிவிட்டரில் பாராட்டுத் தெரிவித்தார்.

இந்நிலையில் தேஜ்பூர் பல்கலைக் கழக மாணவர்களிடத்தில் மெய்நிகர் உரையாடிய பிரதமர் மோடி இந்திய வெற்றியை வெறும் கிரிக்கெட் வெற்றியல்ல பெரிய வாழ்க்கைப் பாடம் என்று பாராட்டி பேசி மாணவர்களுக்கு உத்வேகமளித்தார். அதாவது தன்னம்பிக்கையான நேர்மறையான சிந்தனைகள் எண்ணங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய சவால்களையும் முறியடிக்கும் என்று பிரதமர் மோடி பேசினார். அடிலெய்டில் 36 ஆல் அவுட் ஆகி பெரிய பின்னடைவு கண்டாலும் சோர்ந்து போகாமல் மீண்டெழுந்ததை மாணவர்களுக்கான வாழ்க்கை பாடமாக பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

மனநிலை மாற்றத்தின் மிகச்சிறந்த உதாரணத்திற்கு நம் கிரிக்கெட் அணியையே சுட்டுகிறேன். இந்திய அணி அங்கு பல சவால்களைச் சந்தித்தது. நாம் மிக மோசமாகத் தோற்றொம், ஆனால் மீண்டும் போராடி எழுச்சி பெற்றோம். சவாலான சூழ்நிலைகளில் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தி தொடரை வென்றோம். இந்த இந்திய வீரர்களுக்கு அனுபவம் குறைவு, ஆனால் தன்னம்பிக்கை அதிகம். இவர்கள்தான் இப்போது வரலாறு படைத்துள்ளார்கள். நாம் நம் மனநிலையை தன்னம்பிக்கையுடன் உருவாக்க வேண்டிய தேவையுள்ளது” என்று பிரதமர் மோடி பேசினார்.

Related Stories: