பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம்: ஒரு வாரத்தில் முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்.!!!

புதுடெல்லி: பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் வழங்கியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இதில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில கவர்னருக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆனால் இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து முதலாவதாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கூட ஜனாதிபதி கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் நிராகரித்து விட்டார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு:

இதற்கிடையே, பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கு பேட்டரி நான் வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஒரு ஆதாரத்தை கூட சிபிஐ தரப்பில் இதுவரை கொடுக்கப்படவில்லை. அதனால் இந்த வழக்கில் எனக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, வழக்கில் முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

மத்திய அரசு பதில்:

இந்த வழக்கு நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஜனாதிபதி தான் இறுதி முடிவை எடுப்பார். அவருக்கு தான் உட்சபட்ச அதிகாரம் உள்ளது. அதனால் அவரை நீதிமன்றம் விடுவிக்கும் விதமாக எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

மேற்கண்ட வழக்கானது இரண்டாவது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நாகேஸ்வராவ், அப்துல் நசீர் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா தாமாக முன்வந்து நீதிபதிகள் முன்னிலையில், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து எடுக்கப்பட்ட சட்டப்பேரவை தீர்மானம் குறித்து தமிழக ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுத்து அதனை அறிவிப்பார். இதுகுறித்து மத்திய அரசிடமும் அவர் விளக்கியுள்ளார் என தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கை அடுத்த நான்கு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ஆளுநருக்கு அவகாசம்:

இந்நிலையில், விடுதலை தொடர்பான குழப்பத்தை தெளிவுபடுத்தக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் முன்பு முறையீட்டது. இதனையடுத்து, பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். 

Related Stories: