கோலார்: பட்டுப்புழு உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தும் செடிகளில் விஷம் கலந்துள்ளதால், லட்சக்கணக்கான பட்டு புழுக்கள் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. கோலார் மாவட்டத்தில் பட்டு வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் பட்டு கூடு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். புழு வளர்ச்சி பெறுவதற்காக இலைகள் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பட்டு புழு சாப்பிடும் செடிகள் வளர்க்கப்படுகிறது.
கோலார் தாலுகா, திப்பனேஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சீதாராமா, மஞ்சுநாத், சிவானந்தா, ரமேஷ், நாகராஜ் ஆகியோர் நிலத்தில் பயிர் செய்திருந்த செடிகளின் மீது விஷமிகள் யாரோ விஷ மருந்துகள் தெளித்துள்ளனர். அதை கவனிக்காமல் விவசாயிகள் இலைகளை பறித்து பட்டு புழுக்களுக்கு தீவனமாக கொடுத்தனர்.பட்டு புழுக்கள் கூடு கட்ட இன்னும் பத்து நாட்கள் இருக்கும் நிலையில், விஷ இலை சாப்பிட்ட பட்டு புழுக்கள் கொத்து கொத்தாக இறந்துள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த ஈன செயலில் ஈடுப்பட்டுள்ளவர்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.