பெலகாவி மாவட்டத்தில் சிவசேனா, எம்இஎஸ் கொட்டத்தை அடக்க வேண்டும்: மாஜி முதல்வர் குமாரசாமி கோரிக்கை

பெங்களூரு: பெலகாவி மாவட்டத்தில் சிவசேனா, எம்.இ.எஸ். செய்து வரும் செயல்கள் கண்டிக்கதக்கது. இவர்களின் கொட்டத்தை அடக்க மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தனது டுவிட்டரில் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:கர்நாடக மாநிலத்தில் சில பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைத்துக்கொள்வதாக அம்மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே தெரிவித்துள்ளார்.  அதேபோல், பெலகாவியில் சிலர் கன்னட கொடி ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை பார்க்கும் போது மறைந்த சிவசேனா கட்சி தலைவர் தாக்கரே நடவடிக்கைகள் நினைவுக்கு வருகிறது.

அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் இவர்கள் மீது மாநில அரசு சரியான நடவடிக்கை எடுத்து அவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். இது நம்முடைய மாநிலம். நமது நிலம், கொடி, மொழி குறித்து பேசி வருகிறோம்.  கொடியை ஏற்றி வருகிறோம். இதை கேட்க எம்.இ.எஸ்., சிவசேனா யார். இவர்களுக்கு அந்த உரிமையை கொடுத்தது யார் என கேள்வி எழுப்பினார்.

பெலகாவி மாநகராட்சி எதிரே கன்னட கொடி ஏற்றுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது சமூக விரோத செயல். போராட்டம் நடத்துபர்கள் மனதில் இருப்பது தேச துரோக செயல். கன்னட மொழி, நீர், நிலம் பாதுகாப்பு தொடர்பாக பேசுவதற்கு, அரசியல் தலைவர்கள் அரசியலை மறந்து, கட்சி, பேதத்தை மறந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே நமது உரிமையை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.

Related Stories: