கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் இலங்கையிடம் இருந்து இழப்பீடு வாங்கி தர வேண்டும்: மத்திய அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: “கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 கோடி இழப்பீடு வழங்க இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்” என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மு.க.ஸ்டாலின் (திமுக தலைவர்): கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி - விசைப்படகோடு மூழ்கடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கடலில் மூழ்கடிக்கப்பட்ட மெசியா, நாகராஜ், சாம், செந்தில்குமார் ஆகிய நான்கு மீனவர்களின் உடல்களும் இப்போது மீட்கப்பட்டுள்ளன என்ற பேரிடிச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

எனவே, தமிழக மீனவர்கள் நான்கு பேரை மூழ்கடித்துக் கொன்றிருப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இலங்கைக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். ஜிகே.வாசன் (தமாகா தலைவர்): இந்திய அரசு இலங்கை அரசை கண்டிக்க வேண்டும். உயிரிழந்த தமிழக மீனவர்களின் இழப்புக்கும், மூழ்கடிக்கப்பட்ட படகுக்கும் அதிகபட்ச இழப்பீட்டு தொகையை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற துயரங்கள் நடக்காமல் தடுக்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை இலங்கை அரசிற்கு தெரிவிப்பதோடு. தமிழக மீனவர்களின் உயிருக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கும் இலங்கை அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும். மேலும், கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பத்தினரை பாதுகாக்கும் வகையில் உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும்.

Related Stories: