இலங்கை தாக்குதலினால் இறந்த 4 மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம், அரசு வேலை: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 18ம் தேதி மீன் பிடிப்பதற்காக தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கிய ஜேசுவின் விசைப்படகில் மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்த மீனவர்கள் 19ம் தேதியே கரைக்கு திரும்பி இருக்க வேண்டும். அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என்று  அறிந்தவுடன், எனது உத்தரவின்பேரில் ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடும் பணி நடந்தது. தற்போது, இந்த 4 மீனவர்களும் இலங்கை கடற்படையின் தாக்குதலினால் இறந்துவிட்டதாக மீனவர்கள் மூலம் தகவல் வரப்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இறந்த 4 மீனவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு, அரசு நிறுவனங்களில் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த தாக்குதலில் பாதிப்படைந்த விசைப்படகிற்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். மேலும், இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டு தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து வருகிறேன். இந்த சம்பவம் குறித்து இந்திய தூதரகத்தின் மூலமாக உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம்  எழுதியுள்ளேன்.

Related Stories: