திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளராக ரஜினி மன்ற மாவட்ட நிர்வாகி நியமனம்: தலைமைக்கழகம் அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் வேறு கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்பினால் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விரும்பும் கட்சியில் இணைந்து கொள்ளலாம் என கடந்த 18ம் தேதி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினி மன்றத்தில், தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த ஜோசப் ஸ்டாலின் உட்பட 4 மாவட்ட செயலாளர்கள் கடந்த வாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த ஜோசப் ஸ்டாலின் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

Related Stories: