அதிமுக அரசு தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது: தேர்தல் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: அதிமுக அரசு, 10 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது என திருப்போரூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர், மதுராந்தகம், பல்லாவரம், திருப்போரூர் ஆகிய இடங்களில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திருப்போரூர் கந்தசுவாமி கோயில் குளம் அருகில் திறந்த வேனில் நின்றபடி அவர் பேசியதாவது: திமுக சார்பில் வெற்றி பெற்ற எம்பிக்கள் தமிழகத்துக்கு எந்த திட்டத்துக்காகவும் குரல் கொடுக்கவில்லை. எந்த நிதியையும் பெற்றுத்தரவில்லை. தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக நீர் மேலாண்மை, குடிமராமத்து திட்டம், உணவு தானிய உற்பத்தி, சிறந்த நிர்வாகம் ஆகியவற்றில் சிறப்பான முறையில் செயல்பட்டு தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.

பல ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. அண்மையில் வெள்ளம், கன மழையால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு நிவாரணம் கேட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்தேன். ஆனால், ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக சந்தித்ததாக அவதூறு செய்கின்றனர். எங்களுக்கு ஆட்சி பெரிதல்ல. மக்களே எங்களின் எஜமானர்கள். அதிமுக ஜனநாயக முறையில் நடைபெறும் கட்சி. ஏழ்மை நிலையில் உள்ள எளிய தொண்டனும் இங்கே பதவி பெற முடியும்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற பொதுத்தேர்தல் இது. இந்த ஆட்சி தொடர நீங்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு வாரிசு இல்லை. நாம்தான் அவர்களின் பிள்ளைகள். 2,600 ஏக்கர் பரப்பளவு கொண்ட மதுராந்தகம் ஏரியை சீரமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். இப்பகுதி, பாலற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மீண்டும் நமது ஆட்சி தொடரும் பட்சத்தில் மேலும் தடுப்பணைகள் கட்டப்படும்.

80,000 கோடி ரூபாயாக உயர்த்தி, வங்கிகள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி வருவதற்கு அதிமுக அரசே காரணம். உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா காலத்தில் கூட, 12000 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு மட்டும் 897 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இதுவரை 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளது. அவற்றில் எந்நேரமும் தயாராக ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் பணியில் இருந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் கூட அத்தியாவசியப் பொருட்களான விலை ஏறாமல் தமிழக அரசு பார்த்துக் கொண்டது.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், அனைவருக்கும் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அதிமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் தடையில்லாத மின்சாரம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் செழிக்க பாடுபடும் அரசு அதிமுக அரசு. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் கேட்டு பாதிக்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி உள்ளேன். மேலும், மீதமுள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பேன். திமுக ஆட்சியில் கிராம மக்களுக்கு விவசாயிகளுக்கு எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் தான் விவசாயிகள் காக்கப்படுகின்றனர். நானும் ஒரு விவசாயி என்பதில் பெருமைப்படுகிறேன். அதிமுக ஆட்சிக்கு வந்தால் கிராமப்புற ஏழை எளியோர்கள்? அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

* மு.க.ஸ்டாலினுக்கு மிரட்டல்

திருப்போரூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, ‘‘தேனியில் நடந்த மக்கள் கிராம சபா கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பற்றி ஒருபெண் பேசி உள்ளார். அரசியலில் நேருக்குநேர் மோதி பார். அப்பாவி மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். அதிமுக பலமான தொண்டர்கள் கொண்ட எக்கு கோட்டை. எங்களோடு மோதினால் மண்டைதான் உடையும். எங்கள் மீது வீண் பழி சுமத்தினால் நீங்கள் வெளியில் நடமாட முடியாது என்று தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார்.

Related Stories: