சிதம்பரம்:கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரியாக செயல்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதற்கான அரசாணை இன்று வரை பிறப்பிக்கப்படாததால் முந்தைய நிர்வாக கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. அரசு கட்டணத்தைவிட இது பல மடங்கு அதிகம். இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று 44வது நாளாக நீடித்தது.இந்தநிலையில், பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஞானதேவன் நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், மருத்துவக் கல்லூரியை மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி மூடுவதாகவும், கல்லூரி மாணவர்கள் விடுதிகளை மாலை 4 மணிக்குள் காலி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகையில், ‘கல்லூரியை மூடுவதாக அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது. எந்த பிரச்னை வந்தாலும் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடருவோம் என உறுதியுடன் தெரிவித்தனர்.