சட்டம், விவசாயம் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையம்? தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

மதுரை: சட்டம், விவசாயம் உள்ளிட்ட படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த வக்கீல் மனோஜ்  இம்மானுவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  தமிழகத்தில் நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் ஏராளமாக உள்ளன. அதே நேரம் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் தவிர்த்து இதர உயர்படிப்புகளுக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்க போதுமான வாய்ப்புகளோ, மையங்களோ இல்லை.  சட்டம், கல்வியியல், கணக்குத்தணிக்கை, விவசாயம், கவின்கலை, மேலாண்மை என பல துறைகள் உள்ளன.

இவற்றிற்கும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகள் நடக்கின்றன. இதுபோன்ற துறை சார்ந்த விவரங்கள் மாணவர்களுக்கு தெரியவில்லை. எனவே, தமிழகத்திலுள்ள அனைத்துவிதமான பள்ளிகளிலும் உயர்கல்விக்கான தேசிய நுழைவுத்தேர்வுகள் குறித்தும், அதற்குத் தேவையான பயிற்சி மையங்களை அமைக்கவும், இதற்கு தேவையான முகாம்களை நடத்தவும் உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், தமிழகத்தில் இதுபோன்ற பயிற்சி மையங்கள் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அரசுத் தரப்பில் அறிக்கையளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.4க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: