கூடுவாஞ்சேரி: குட்கா கடத்த முயன்ற 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். தப்பிப்பதற்காக மாடியில் இருந்து குதித்த வடமாநில வாலிபருக்கு கை, கால்கள் முறிந்தன. அவர்களிடம் இருந்து ஒன்றரை டன் குட்கா, 2 வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி 1வது வார்டு மகாலட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து, பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதாக, கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார், நேற்று அதிகாலையில் சம்பவ இடத்துக்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, ஒரு வீட்டில் இருந்து, குட்கா பார்சல்களை கொண்டு வந்து வேனில் ஏற்றுவதை பார்த்தனர். உடனே போலீசார், அங்கிருந்த 2 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதை 2வது மாடியில் இருந்து பார்த்த வாலிபர், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, அங்கிருந்து கீழே குதித்தார். இதில், அவரது 2 கை, கால்கள் முறிந்தன.