பிப்ரவரி 2-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! ஆளுநர் உரையுடன் தொடங்கும்: பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு

சென்னை: வரும் பிப்ரவரி 2-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும். கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்றும், ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், பிப்ரவரி 2-ஆம் தேதி கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறியிருப்பதாவது; தமிழக ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் கூட்டியிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அன்றே, அதாவது பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்கள். அவ்வமயம் தங்கள் வருகையை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது நிகழும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிப்ரவரி 2-ஆம் தேதி கூட இருக்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: