இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி.: முதல்வர் அறிக்கை

சென்னை: இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பின்வருமாறு காண்போம். புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 18-ம் தேதி அன்று மீன் பிடிப்பதற்காக 214 விசைப்படகுகள் கடலுக்குள் சென்றுள்ளது.   

இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மெசியா, நாகராஜ், செந்தில்குமார் மற்றும் சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இம்மீனவர்கள் 19-ம் தேதி அன்றே கரைக்கு திரும்பி இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை. இதனால் இந்திய கடலோர காவல் படையின் ஒரு கப்பல், இந்திய கப்பல் படையைச் சேர்ந்த ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றது.

ஆனால் தற்போது 4 மீனவர்களும் இலங்கை கடற்படையின் தாக்குதலினால் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விபத்தில் இறந்த 4 மீனவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். அதனை அடுத்து அவர்களது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தகுதியின் அடிப்படையில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டார். இந்த தாக்குதலில் பாதிப்படைந்த விசைப்படகிற்கு அரசின் நிவாரணம் வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டு தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக முதல்வர் தெரிவித்தார்.   

அதனையடுத்து இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு,  உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து இந்திய தூதரகத்தின் மூலமாக உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக முதல்வர் பழனிசாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: