சின்னசேலம்: சின்னசேலம் ஏரி 8 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைந்து தண்ணீர் வழிந்தோடுவதால் பொதுமக்கள் கிடா வெட்டி பூஜை செய்து கொண்டாடினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள பெரிய ஏரி, கோமுகி அணை கால்வாய் மற்றும் மயூரா நதியில் இருந்து வரும் நீரால் நிரம்புகிறது. இந்த ஏரியின் மூலம் சின்னசேலம் நகர பகுதி மக்கள் குடிநீர் வசதி பெறுகின்றனர். பெத்தானூர், ஈசாந்தை உள்ளிட்ட 10 கிராம விவசாயிகளும் பயன் பெறுகின்றனர். நீர்வரத்து வாய்க்கால்களை சரிசெய்ய பொதுப்பணித்துறையும், வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் முன்வரவில்லை. இதனால் கடந்த 10 ஆண்டுகளாகவே கடத்தூர், தெங்கியாநத்தம், தென்செட்டியந்தல் உள்ளிட்ட ஏரிகளுக்கு மட்டுமே நீர்வரத்து இருந்தது.