×

பெண்களின் கராத்தே கூடம்

நன்றி குங்குமம் தோழி

கேரளாவின் ‘கங்காழா’ கிராமம்

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் மாநிலம் கேரளா. இந்த அழகிய மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமம். அந்த கிராமத்தில் எங்கு திரும்பினாலும், ‘கியாய்’, ‘கியாய்’ என சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சத்தம் வரும் திசையை பார்த்தால் 10 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தற்காப்பு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். இதுவரை 7800 கிராம பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டிலேயே முதன் முறையாக தற்காப்பு கலைப் பயிற்சி பெற்றுள்ள கிராமம் என்ற பெருமையை கங்காழா பெற்றுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிர்பயா திட்டத்தின் அடிப்படையில் இங்கு தற்காப்பு பயிற்சிகள் துவங்கப்பட்டது. இங்கு ஜூடோ, கராத்தே மற்றும் கேரளாவின் பாரம்பரிய தற்காப்பு கலைகளின் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு  பெண்களும் கராத்தே, குங்ஃபு  என ஏதாவது ஒரு தற்காப்பு கலையின் பயிற்சியை பெற்றுள்ளனர்.
 
‘‘இனி அந்த கிராமத்தில் ஈவ் டீசிங்கோ, குடித்துவிட்டு பெண்களிடம் அத்து மீறும் ஆண்கள் நடமாட்டம் குறைந்து விடும்’’ என்றார் கங்காழா பஞ்சாயத்தின் தலைவர். ‘‘கேரளா காவல்துறையில் தற்காப்பு கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு எங்க கிராமத்து பெண்களுக்கு பயிற்சி அளித்து இருக்கிறோம். மேலும் பெண்கள் பொது இடங்களில் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு இது ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும்’’ என்றார்.

இது தொடர்பாக வைக்கம் பகுதியை சேர்ந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹேமா சுபாஷ், ‘‘பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு பற்றி விளக்கங்களும் பயிற்சியில் அளிக்கப்படுகிறது’’ என்றார். பயிற்சி எடுத்து வரும் 41 வயதான பெண் ஒருவர், ‘‘என்னுடைய குடும்ப சூழல் காரணமாக நான் வெளியே வேலைக்கு செல்ல வேண்டிய நிலை.

பல்வேறு இடங்களுக்கு செல்லும் போது நான் பாலியல் ரீதியாக பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். அப்போது எல்லாம் பயந்து, பிரச்னையில் இருந்து காத்துக் கொள்ள ஒதுங்கிவிடுவேன். இப்போது எந்த நேரத்தில் யார் என்னை தாக்க வந்தாலும் எதிர்த்து அவர்களை வீழ்த்தும் நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. இனி கோழையாக பயந்து ஓடாமல், என்னை மட்டும் இல்லை என்னை போல் பாதிக்கப்படும் பெண்களையும் நான் பயின்ற தற்காப்பு கலையால் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற தைரியம் வந்துவிட்டது’’ என்றார். கங்காழா கிராம பெண்கள் அனைவரும் பாயும் பெண் புலிகள் என்பதில் சந்தேகமில்லை.

- கோமதி பாஸ்கரன்

Tags : Women's Karate Hall ,
× RELATED நிர்வாகத் துறையிலுருந்து சினிமா வரை…