பட்ஜெட் தொடர் பற்றி ஆலோசனை 30ல் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக  வரும் 30ம் தேதி அனைத்து கட்சி தலைவர்களுடன் காணொலி மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாகவும், கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுவது வழக்கமாகும். கூட்டத் தொடருக்கு ஒரு நாள் முன்னதாக இது நடத்தப்படும். இந்நிலையில், இந்தாண்டு பட்ஜெட் கூட்ட தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. ்அதற்கு மறுநாள் இந்த அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று அளித்த பேட்டியில், ‘‘கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது பற்றி ஒரு நாள் முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பித்த பின் அடுத்த நாள் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு, பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதில், நாடாளுமன்றத்தில் அரசு மேற்கொள்ள உள்ள மசோதாக்கள் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் கேட்டறியப்படும். இது, காணொலி மூலமாக நடத்தப்படும்,” என்றார்.

Related Stories: