சென்னை: தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சிகளில் இயங்கும் 35 நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, அதற்கான ஆசிரியர் பணியிடங்களையும் அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணை: 2020-2021ம் ஆண்டில் 35 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, நடுநிலைப் பள்ளிகள் அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. தரம் உயர்த்தப்படும் 35 நடுநிலைப் பள்ளிகளில் 1-5ம் வகுப்புகள் தொடக்க பள்ளிகளாக நிலை இறக்கப்படுகின்றன. தரம் உயர்த்தப்படும் 35 பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தப்படுகிறது. மேற்கண்ட 35 பள்ளிகளுக்கு தலா 2 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 70 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகிறது.