மண்ணுக்குள் புதைந்த வீடு: மதுரையில் பரபரப்பு

மதுரை: மதுரையில் பெய்த மழை எதிரொலியாக, இன்று காலை தரைத்தளம் மற்றும் 3 மாடிகளைக் கொண்ட வீடு மண்ணுக்குள் புதைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை தெற்கு வெளிவீதி பகுதியில் மீனாட்சி டாக்கீஸ் அருகே ஒரு வீடு இன்று காலை திடீரென மண்ணுக்குள் புதைந்து, அருகாமை வீட்டின் மீது சாயந்தது. இங்கு வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியில் ஓடி உயிர் தப்பினர். ஒருவருக்கு மட்டும் கை முறிந்து காயம் ஏற்பட்டது. தகவலறிந்து நகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். இது குறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில்,‘‘மீனாட்சிபள்ளம் என்ற இந்த தாழ்வான பகுதியில் எப்போதும் தண்ணீர் தேங்கும்.

சமீபத்திய மழையால் இங்கு தண்ணீர் தேங்கி வீடு ஊறி இருந்துள்ளது. 1995ல் கட்டப்பட்ட இந்த வீடு தரைத்தளம் மெல்ல உள்ளே புதைந்து, அருகாமை வீட்டின் மீது சாய்ந்தபடி நிற்கிறது. இன்று மாலைக்குள் இந்த வீட்டை இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக வீடுகளில் இருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர். விபத்து குறித்து தெற்குவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்’’ என்றார்.

Related Stories: