சென்னை: கணவர் சந்தேகப்பட்டதால் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகை சித்ரா பூந்தமல்லி அருகே உள்ள தனியார் விடுதியில் கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, டிச. 14ம் தேதி ஹேம்நாத்தை கைது செய்தனர். இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில், தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எந்த குற்றமும் செய்யாததால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சித்ராவின் பெற்றோர் மனு தாக்கல் செய்ய இருப்பதாக அவா்களது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞா் பிரபாவதி, இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதால் சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக சென்னை நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 2-க்குள் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.