ஷாங்காய்: அலிபாபா நிறுவனரும், சீனத்தின் பணக்காரர்களில் முன்னணியிலிருப்பவருமான ஜாக் மா கடந்த மூன்று மாதங்களாக மாயமானார். ஜாக் மா வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. ஜாக் மா இருப்பிடம் குறித்த தகவல்களும் வெளியாகாமல் இருந்தது. ‘ஆப்ரிக்காவின் வணிக கதாநாயகர்கள்’ என்ற தனது சொந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதித் தொடரில் கூட ஜாக் மா பங்கேற்கவில்லை. இதுதான் அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்வியை அதிகரிக்கச் செய்திருந்தது.
பிரிட்டனிலிருந்து வெளியாகும் ஊடகங்களில், நவம்பர் மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையில் அலிபாபா நிறுவனர் ஆஜராகியிருக்க வேண்டும், ஆனால் அவருக்குப் பதிலாக அலிபாபா செயல்தலைவர்தான் பங்கேற்றார் என்றும், இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அலிபாபாவின் இணையதளத்தில் இருந்து கூட ஜாக் மாவின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. அவர் எங்கே போனார் என்று தேடப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக பொதுவெளியில் தோன்றினார். திடீரென சீனத்தின் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 100 ஆசிரியர்களுடன் இன்று காணொலி வாயிலாக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.