சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் கடைகள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் தங்கள் குடும்பத்துடன் காமராஜர் சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காட்சியளிக்கிறது. சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் கடைகள் திட்டம் செயல்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே மெரினா கடற்கரையில் வணிகம் செய்து வரும் வியாபாரிகளுக்கு 60 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் 540 கடைகளும், புதிதாக கடை அமைக்க விரும்புவோர்களுக்கு 360 கடைகளும் என மொத்தம் 900 கடைகள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.