தோகைமலை அருகே வடசேரி ஆர்டிமலை பகுதியில் புதிய பாலம், சாலை தரமின்றி அமைத்ததால் ஒரு அடி கீழே இறங்கி பழுதான அவலம்-நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

தோகைமலை : தோகைமலை அருகே வடசேரியில் இருந்து ஆர்டிமலை செல்லும் மெயின்ரோடு குளித்தலை நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சுமார் 2 கி.மீ தொலைவு உள்ள திருச்சி தோகைமலை மெயின் ரோட்டை இணைக்கும் வடசேரி ரோடு பழுதானதால் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்தது. இந்த ரோட்டில் புதிய பாலமும் அமைக்கப்பட்டது.

வடசேரி ஆர்டிமலை மெயின் ரோட்டில் புதிய பாலம் அமைத்தல் மற்றும் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது வேகமாக பணிகள் நடைபெற்றதாக தெரிகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் புதிய தார்சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை வேகமாக செய்யக்கூடாது என தடுத்து உள்ளனர்.

பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய பாலம் அமைத்து தார்சாலையும் போடப்பட்டது. மேலும் புதிய பாலத்தின் கிழக்கு பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க அஸ்திவாரம் பறித்து விட்டு பின்னர் தடுப்பு சுவர் எழுப்பாமல் மீண்டும் அஸ்திவாரத்தை மூடி உள்ளதாகவும் இப்பகுதியினர் தெரிவித்தனர்..

இந்நிலையில் கடந்த வாரம் பெய்த தொடர்மழைக்கு புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் இருபுறமும் இணைக்கப்பட்ட தார்சாலை சுமார் 1 அடிக்கு இறங்கிவிட்டது. பாலத்தின் அருகில் இருபுறமும் தார்சாலை இறங்கியது தெரியாமல் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்..

இதேபோல் இந்த சாலையில் வந்த அரசு பேருந்தும் கவிழும் நிலைக்கு சென்று உள்ளது.இதுகுறித்து தகவல் அறிந்த வடசேரி ஒன்றிய கவுன்சிலர் லதாவேலுச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும் பொதுமக்கள் பழுதான ரோட்டில் விபத்துகள் ஏற்படாதவாறு தடுப்பு அமைத்தனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தபின்பு தற்காலிகமாக சரிசெய்து உள்ளனர்.

அதிகாரிகளின் கவனக்குறைவால் தரமில்லாமல் அமைக்கப்பட்டதால் பாலத்தின் அருகில் இருபுறமும் 1 அடிக்கு கீழ் தார்சாலை இறங்கியதாக இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.ஆகவே பாலத்தின் அருகில் இருபுறமும் தரமான தார்சாலை அமைக்கவும், பாலத்தின் அருகில் தடுப்பு சுவர் எழுப்பவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: