கோப்சால் ஏரியை தூர் வாரினால் தண்ணீர் பிரச்னை இருக்காது

ஊட்டி:  ஊட்டி நகராட்சிக்குட்பட்ட டம்ளர் முடக்கு பகுதியில் உள்ள கோப்சால் ஏரியை தூர்வாரினால் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட டம்ளர் முடக்கு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோப்சால் என்ற ஏரி இருந்தது. இந்த ஏரியை சுற்றிலும் அப்போது குடியிருப்புக்கள் ஏதும் இல்லாத நிலையில் இந்த தண்ணீர் ராஜ்பவன், ராஜ்பன் அரசு குடியிருப்புக்களுக்கு குடிநீராக பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் இந்த ஏரியை சுற்றிலும் மக்கள் குடியேற ஆரம்பித்தனர்.

பெரும்பாலானவர்கள் இந்த ஏரியின் கரையோரத்திலேயே குடியிருப்புக்களை கட்டினர். நாளுக்கு நாள் இப்பகுதியில் குடியிருப்புக்கள் அதிகரிக்கவே இந்த ஏரி ஆக்கிரமிக்கப்பட்டது மட்டுமின்றி, நீர் மாசுபட ஆரம்பித்தது.

குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த ஏரியில் கலந்து தற்போது கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளது. போதிய பராமிரிப்பு இல்லாத காரணத்தால் இந்த ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பதும் நிறுத்திக் கொள்ளப்பட்டது. நகராட்சி நிர்வாகம் இந்த ஏரியில் தூர் வாரி, சுற்றுச்சுவர் அமைத்தால், டம்ளர் முடக்கு மற்றும் ராஜ்பவன் அரசு குடியிருப்பு வாசிகளுக்கு தண்ணீர் பிரச்னை வர வாய்ப்பில்லை.

Related Stories: