தாவரவியல் பூங்காவில் மலர் செடி நடவு பணி

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா குளங்களை சுற்றிலும் மலர் செடி நடவு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.ஆண்டு தோறும் கோடை சீசனின் போது ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இதனை காண நாடு முழுவதிலும் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கை. இதற்காக, ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் முதல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். பூங்கா முழுவதிலும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதில், மலர்கள் பூத்துக் குலுங்கும். இந்நிலையில், மலர் கண்காட்சிக்காக பூங்கா முழுவதிலும் தற்போது மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பூங்கா புல் மைதானத்தின் நடுவே உள்ள குளத்தை சுற்றிலும் தற்போது மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் நேற்று துவங்கியது. குளத்தை சுற்றிலும், பிகோனியா மலர் செடிகள் நடவு செய்யப்படுகின்றன. இந்த மலர் செடிகள் பனியில் கருகாமல் இருக்க நாற்று நடவு செய்யப்பட்டவுடன், அவைகளை மறைத்து கோத்தகிரி மிலார் செடிகளும் நடவு செய்யப்படுகிறது. கோடை சீசனுக்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில், தற்போது பூங்காவில் உள்ள பாத்திகள் மற்றும் தொட்டிகளில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் துரித கதியில் நடக்கிறது.

Related Stories: