தேனி :‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நாயகர் அல்ல; ஜல்லிக்கட்டு வில்லன்’ என தேனியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தேனி புதிய பஸ் நிலையத்தில் நாட்டுமாடு நலச்சங்கம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில், ‘நாட்டு மாடு இனம் அழிக்கும் வகையில், இனவிருத்தி காளை தடைச்சட்டம் கொண்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நாயகர் இல்லை. ஜல்லிக்கட்டு வில்லன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாட்டுமாடு நலச்சங்க மாவட்ட தலைவர் கலைவாணன் மீது தேனி போலீசார் அவதூறு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து கலைவாணன் கூறியதாவது:ஜல்லிக்கட்டு நடந்தபோது, அலங்காநல்லூரிலேயே இந்த போஸ்டர்களை ஒட்டினோம். தேனியில் போஸ்டர் ஓட்டியதற்காக வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். நாட்டுமாடு இனத்தை அழிக்கும் வகையில், காளை மாடு இனவிருத்தி தடைச்சட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி மாடுகளுக்கு சினை ஊசி மூலம்தான் கரு செலுத்த வேண்டும். ஊசி மூலம் சினை ஏற்படுத்தினால், மாடுகள் உண்மையான வீரியத்தை இழக்கும். இதனால் காளை இனமே அழியும்.
தேனி மாவட்டத்தில் அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி ஆகிய ஊர்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. கோட்டூரில் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல மாட்டுவண்டி பந்தயம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மலை மாடுகள் மேய்ச்சலுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறு நாட்டுமாடுகள் இனம் அழிவதற்கு காரணமாக இருப்பவரை எப்படி ஜல்லிக்கட்டு நாயகர் என அழைப்பது; அவர் ஜல்லிக்கட்டுக்கு வில்லன்தான்.இவ்வாறு அவர் கூறினார்.