'இயேசு அழைக்கிறார்'என்ற மத பிரச்சார கூட்டங்களை நடத்தி வரும் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை..!!

சென்னை: இயேசு அழைக்கிறார் என்ற மத பிரச்சார கூட்டங்களை நடத்தி வரும் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாரை சேர்ந்த பால் தினகரன் என்பவர் இயேசு அழைக்கிறார் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான சென்னை, கோவை, பாரிமுனை, அடையாறு, கோவை பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட 28 இடங்களில் இன்று காலை முதல் சுமார் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக அவரது தலைமை அலுவலகத்திலும், அடையாறில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பள்ளியிலும் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பால் தினகரன் வரி ஏய்பு செய்ததாகவும், அதேநேரத்தில் இயேசு அழைக்கிறார் என்ற அமைப்புக்கு எங்கிருந்து முதலீடு செய்யப்படுகிறது என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இயேசு அழைக்கிறார் என்ற அமைப்பு வெளிநாடுகளில் பல்வேறு சொத்துக்கள் வைத்திருப்பதாகவும் அது தொடர்பான ஒரு விசாரணையும் நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த சோதனையானது நாளை வரை தொடரும் எனவும் நிறுவனத்தில் கைப்பற்ற பொருட்கள் குறித்து மாலை அறிவிப்பு வெளியாகும் என வருமான வரித்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இயேசு அழைக்கிறார் கிறிஸ்துவ நிறுவனங்களில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: