சசிகலாவை சிறையில் சந்திக்க தமிழக முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் விருப்பம்: அனுமதி கேட்டு சிறை நிர்வாகத்துக்கு விண்ணப்பம்

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுகிறார். அவர் விடுதலைக்கு முன் சிறையில் சந்தித்து பேச வேண்டும் என்ற முயற்சியில் வக்கீல்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அபராத தொகையை அவர்கள் செலுத்தினர். இந்நிலையில் சசிகலாவின் தண்டனை காலம் வரும் 27ம் தேதியுடன் முடிவதால், அவரை அன்று விடுதலை செய்வதாக கர்நாடக சிறை துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவர் விடுதலைக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளதால், விடுதலைக்கு முன் சிறையில் சந்தித்து பேசிவிட வேண்டும் என்பதில் அவரது வக்கீல்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் விருப்பமாக உள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக சிறை நிர்வாகமும் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி வழங்க யோசித்து வருவதாக தகவல் வெளியாகியது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு 30க்கும் ேமற்பட்டவர்கள் சசிகலாவை சந்திக்க நேரம் ஒதுக்கி கொடுக்கும்படி விண்ணப்பம் கொடுத்துள்ளதாக தெரியவருகிறது. விண்ணப்பம் கொடுத்துள்ளவர்களின் தமிழக முன்னாள் அமைச்சர்கள் இருவரின் பெயரும் இருப்பதாக தெரியவருகிறது. சசிகலா ஆதரவாளர்களின் கோரிக்கையை சிறை நிர்வாகம் ஏற்குமா? இல்லையா? என்பது இரண்டொரு நாளில் தெரியவரும்.

Related Stories: