கொடைக்கானல் ஆயுத பயிற்சி வழக்கு: கைதான 7 பேரும் விடுதலை: திண்டுக்கல் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திண்டுக்கல்: கொடைக்கானலில் ஆயுத பயிற்சி வழக்கில் கைதான 7 பேரையும் விடுதலை செய்து திண்டுக்கல் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் புல்லாவெளி வனப்பகுதியில் 2008ம் ஆண்டு ஆயுத பயிற்சியில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்களுக்கும், அதிரடி படை போலீசாருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்ட் நவீன் பிரசாத் சுட்டு கொல்லப்பட்டார். தப்பிய மாவோயிஸ்ட்களான கண்ணன், காளிதாஸ், பகத்சிங், ரீனா ஜாய்ஸ்மேரி, செண்பகவல்லி, ரஞ்சித், நீலமேகம் ஆகிய 7 பேர் மீது கொடைக்கானல் போலீசார் இந்திய வெடிமருந்து சட்டம் உள்ளிட்ட 16 சட்ட பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வேலூர் சிறையில் இருந்த ரீனா ஜாய்ஸ் மேரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஜாமீனில் இருந்த ரஞ்சித், நீலமேகமும் ஆஜராயினர். மற்ற 4 பேர் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். பி்ன்னர் 7 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தினால், அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: