மேலும் 5 லட்சம் தடுப்பூசி இன்று வருகிறது: தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் மேலும் 5 லட்சம் தடுப்பூசி இன்று வருவதாகவும், இதுவரை யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  பார்வையிட்டார். இதன்பிறகு அவர் அளித்த பேட்டி : கொரோனா தடுப்பூசி நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரிக்கிறது. இது வரை தமிழ்நாட்டில் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. 18ம் தேதி மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

சில மாநிலங்களில் எல்லா நாட்களும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. தமிழகத்தில் தொய்வின்றி வாரம் முழுவதும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்துக்கு கூடுதலாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 கோவிஷீல்டு  தடுப்பு மருந்துகள் இன்று வருகிறது. சுகாதாரப் பணியாளர்களை தொடர்ந்து அடுத்த பிரிவு முன்களப்பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி ஊழியர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: