12 ஆயிரம் தற்காலிக தூய்மை பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியது: நல்ல நிர்வாக நடைமுறை அல்ல: மாநகராட்சி ஆணையருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 12 ஆயிரம் தற்காலிக தூய்மை பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியது நல்ல நிர்வாக நடைமுறை அல்ல என்று மாநகராட்சி ஆணையருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியில் என்யூஎல்எம் திட்டத்தில் பணியாற்றி வந்த 12 ஆயிரம் தற்காலிக தூய்மை பணியாளர்கள் திடீரென கடந்த 12ம் தேதி பணிநீக்கம் ெசய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தை சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் நேற்று நேரில் சென்று வழங்கினர். அப்போது சோழிங்கநல்லூர் தொகுதி உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உடன் இருந்தார். அந்த கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக ‘என்யூஎல்எம்’ திட்டத்தின் சென்னை மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்த 12 ஆயிரம் பேரை திடீரென கடந்த 12ம் தேதி பணிநீக்கம் செய்திருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.

இந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் சீனப்பிரதமர் வருகை,   வர்தா, நிவர் ஆகிய புயல்கள் மற்றும் கொரோனா பேரிடர் போன்ற பல்வேறு நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில் தூய்மை பணியாற்றியவர்கள். அது மட்டுமின்றி இவர்களில் 90 சதவீதம் பேர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அவர்களை பணி நீக்கம் செய்திருப்பது நல்ல நிர்வாக நடைமுறை அல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதே வேளையில், இவர்களின் வாழ்வாதாரம் மற்றும் திறம்பட ஆற்றிய பணி கருதி 12 ஆயிரம் பேரையும் மீண்டும் பணியில் அமர்த்திட கேட்டுக்கொள்கிறேன். உயர்நீதிமன்ற வழக்கின் முடிவிற்காக காத்திராமல், இவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: