பாஜ ஒட்டிய பேனரை கிழித்த அதிமுக பிரமுகர்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் பாஜவினர் ஒட்டும் பேனர்களை கடந்த 3 மாதங்களாக மர்ம நபர் கிழித்து வருவதாக புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன் அந்த நபரை பிடிக்க அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் பாஜவினர் ஒட்டிய பேனரை மர்ம நபர் கிழிப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. உடனே இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் வடசென்னை மாவட்ட பாஜ ஊடகப்பிரிவு தலைவர் நவீன் பிரகாஷ் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் விசாரணை செய்ததில் அந்த மர்ம நபர் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபாகரன். அதிமுக நிர்வாகி என்பது தெரியவந்தது. பாஜவினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறினர்.

அதன்பேரில் அந்த வாலிபரை போலீசார் அழைத்து விசாரணை செய்வதாக கூறினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுகவும் பாஜவும் கூட்டணி உடன்படிக்கை பேசி வரும் நிலையில் பாஜ ஒட்டிய பேனரை அதிமுக பிரமுகர் கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: