சசிகலா விடுதலை குறித்து முக்கிய விவாதம்?: வரும் 22-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!!!

சென்னை: வரும் 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 9-ம் தேதி சென்னை வானகரம் வெங்கடேஸ்வரா மண்டபத்தில் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு ஒப்புதல், கூட்டணி பற்றி முடிவெடுக்க இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோருக்கு அதிகாரம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கிடையே, வரும் ஜனவரி 27-ம் தேதி காலை 10 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார் என்று கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சசிகலாவை வரவேற்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வரும் ஜனவரி 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 22-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சசிகலா விடுதலை, அதிமுக கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனை தவிர, புதுப்பிக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தை வரும் 27-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார். இது தொடர்பான ஆலோசனைகளும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் திரளான தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

Related Stories: