×

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ : பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி : ஆஸ்திரேலிய தொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணிக்கு பிசிசிஐ 5 கோடி போனஸ் அறிவித்திருக்கிறது.  ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4வது டெஸ்ட் போட்டியில் 328 ரன்கள் இலக்கை எதிர்த்து மிகப்பிரமாதமாக ஆடிய இந்திய அணி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை காபா மைதானத்தில் பதிவு செய்தது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 1 என இந்திய அணி வென்று காட்டியுள்ளது. தொடர்ச்சியாக 2வது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்றி பார்டர்-கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது.கடந்த 1988 முதலே காபா மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. மெல்பேர்ன், காபா என இரண்டு மைதானங்களில் இந்தியா வெற்றிபெற்று, ஆஸ்திரேலிய அணியின் 32 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பலரும் பாராட்டிவரும் நிலையில் பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.

அதில், ‘’ஆஸ்திரேலியாவின் இந்திய அணியின் வெற்றிகுறித்து நாம் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அவர்களின் அயராத உழைப்பும், பேரார்வமும் போட்டி முழுவதும் வெளிப்பட்டது. வெற்றிதான் அவர்களுடைய இலக்காக இருந்ததால் அதற்கான திடமான மன உறுதியும் வெளிப்பட்டது.வாழ்த்துக்கள் இந்திய அணி. எதிர்கால வெற்றிகளுக்கும் வாழ்த்துக்கள்’’ என்று வாழ்த்தியிருக்கிறார்.

இதற்கிடையே, இந்திய அணியின் சிறப்பான விளையாட்டை பாராட்டி, பிசிசிஐ போனஸாக ரூ. 5 கோடி இந்திய அணிக்கு வழங்குவதாக தெரிவித்திருக்கிறது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் ஜெய்ஷா.

Tags : win ,Australian ,BCCI ,Modi , Australia, BCCI, Prime Minister Modi, Greetings
× RELATED நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த...