ஈரமான நெல்லை உலர்த்தும் நவீன இயந்திரம் -தஞ்சை விவசாயி புதிய முயற்சி

தஞ்சை : ஈரமாக உள்ள நெல்லை உலர்த்தி விற்பனை செய்யும் இயந்திரத்தை விவசாயி டெல்டா மாவட்டத்துக்கு முதன்முறையாக கொண்டு வந்து சோதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.காவிரி டெல்டாவில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் குறுவை, சம்பா நெல் அறுவடை செய்யும் போது பருவ மழையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மேலும், கடந்த சில ஆண்டுகளில் பருவம் தவறி பெய்யும் மழையின் காரணமாக நெல் அறுவடை செய்யும் போது மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகமாக நெல் மணிகள் வீணாகி விற்பனை செய்ய விவசாயிகள் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.

நெல் அறுவடை காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், ஈரப்பதத்தின் அளவை 17 சதவீதத்திலிருந்து உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுப்பதும், அவ்வப்போது அரசு ஈரப்பதத்தின் அளவை தளர்த்தி கொள்கை முடிவை அறிவிப்பதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிவர், புரெவி புயலின் போது அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இதனால் அறுவடை செய்த நெல்லையும் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி கொள்முதல் செய்யாமல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியது. இதையடுத்து விவசாயிகளே நெல் உலர்த்தும் இயந்திரத்தை ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்திடமிருந்து வடிவமைத்து பெற்று சோதனை முயற்சிக்காக தஞ்சைக்கு வரவழைத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூரில் உள்ள கொள்முதல் நிலையத்தில் நேற்று, நெல் உலர்த்தும் நவீன இயந்திரம் பொருத்தப்பட்டு அதனை சோதனை முயற்சியை தொடங்கியுள்ளனர்.

1 மணி நேரத்தில் 4டன் ஈரப்பதத்தை உலர்த்தும்: இது குறித்து விவசாயி சீனிவாசன் கூறுகையில், அறுவடை காலங்களில் நெல் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. இதனை போக்க இணைய தளத்தில் தேடினேன். அப்போது மணிலா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மொபைல் கிரைன் ட்ரையர் என்ற இயந்திரம் பயன்படுத்தப்படுவதை அறிந்தேன்.

பின்னர் இது தொடர்பாக ஓசூர், வேலூர் ஆகிய பகுதிகளில் வேளாண் இயந்திரங்களை வடிவமைக்கும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு மொபைல் கிரைன் ட்ரையர் இயந்திரம் தொடர்பாக கூறினேன். அவர்களும் இதனை வடிமைத்து தந்துள்ளனர். இந்த இயந்திரம் ரூ.10 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் 1 மணி நேரத்தில் 4 டன் நெல் உலர்த்தி, தூசியை அகற்றிவிடும். இந்த இயந்திரம் தற்போது பொன்னாப்பூரில் சோதனை முயற்சியில் இயக்கப்படுகிறது.

இந்த இயந்திரம் வெற்றிகரமாக இயங்கினால், தமிழக அரசே அனைத்து கொள்முதல் நிலையங்களில் இந்த இயந்திரத்தை நிறுவி நெல்லை உலர்த்தியும், தூசி இல்லாமல் சுத்தம் செய்தும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

Related Stories: