சூரத் அருகே சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மோடி

குஜராத்: குஜராத் மாநிலம் சூரத் அருகே கோசம்பா என்ற இடத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த அனைவரும் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டருக்கு வழி விடும்போது, லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி அருகில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதாக கூறப்படுகிறது. இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என கூறினார்.

Related Stories: