பவானி அருகே தீண்டாமை கொடுமை கிணற்றில் தண்ணீர் எடுக்க தடை: நடவடிக்கைகோரி புகார்

பவானி: பவானி அருகே புன்னம் ஊராட்சி, இந்திரா நகர் காலனி பகுதியில் 150 தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக கடந்த 60 ஆண்டுக்கு முன்பு கிணறு தோண்டப்பட்டு குடிநீர் வசதி செய்து தரப்பட்டது. இதேபோன்று பிற சமூக மக்களுக்கும் தனித்தனியே அப்பகுதியில் கிணறுகள் தோண்டப்பட்டு தண்ணீர் வசதி செய்து தரப்பட்டது. இக்கிணற்றின் தண்ணீரை மின்மோட்டார் மூலம் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல முயற்சி நடைபெற்று வருகிறது. இதனால், கடந்த 16ம் தேதி இப்பகுதியினர் தண்ணீர் இறைக்க வாளி மற்றும் கயிறுகளுடன் சென்றபோது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்ததோடு, தொடக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். இதனால் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே இப்பிரச்னையில் தலையிட்டு தாழ்த்தப்பட்டோர் கிணற்று தண்ணீரை பயன்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இரு சமூகங்களுக்கு இடையே மோதல் உருவாகும் நிலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என பவானி டி.எஸ்பி. அலுவலகத்தில் நேற்று 50க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து வருவாய்த்துறை, காவல்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இன்று கிராம மக்களுடன் கலந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்துக்கின்றனர்.

Related Stories: