மதுரை: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 8 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளதால், கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், அதலையைச் சேர்ந்த புஷ்பவனம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மன்னார் வளைகுடா பகுதி ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இப்பகுதியில் 21 தீவுகள் உள்ளன. மன்னார் வளைகுடாவில் அரிய வகை மீன்கள், கடல் பறவைகள், அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் பாசிகள் நிறைந்துள்ளன. இப்பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேவையற்ற பழைய மீன்பிடி வலைகளை கடலில் வீசுகின்றனர். இதனால் கடல் மாசடைந்து கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.