பீஜிங்: கொரோனாவை பரப்பிவிட்ட சீனா அவசர அவசரமாக 6 புதிய மருத்துவமனைகளை கட்டி வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா இன்று வரை உலக நாடுகளை ஆட்டிப்படைக்கிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நாடாக இருந்தாலும், சீனா கடுமையான கட்டுப்பாடுகளால் மிக வேகமாக மீண்டது. கடந்த 5 மாதமாக அங்கு நிலைமை சகஜ நிலைக்கு திரும்பி விட்டநிலையில், தடுப்பூசியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தநிலையில், சீனா மீண்டும் புதிய மருத்துவமனைகளை அவசர அவசரமாக கட்டி வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக புதிதாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் புதிய மருத்துவமனை கட்டப்படுவது மீண்டும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சனியன்று 1500 படுக்கை அறைகள் கொண்ட மருத்துவமனையை சீனா கட்டி முடித்துள்ளது. இது ஹெபாய் மாகாணத்தில் பீஜிங்கிற்கு அருகே நாங்கோங்கில் கொரோனா நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டு வரும் மொத்தம் 6500 அறைகள் கொண்ட 6 மருத்துவமனைகளில் ஒன்றாகும். இதேபோல் ஷஜியாங்ஜூவாங்கில் 3000 அறைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகின்றது. பீஜிங் மற்றும் ஹைலோங்ஜியாங், லியோனிங், தென்மேற்கில் சிச்சுவான் மாகாணங்களில மீண்டும் நோய் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் சீனா மருத்துவமனை கட்டும் பணியை வேகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவமனைகள் கட்டுவதற்கு சீனாவில் கொண்டாடப்படும் புத்தாண்டும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. வருகிற பிப்ரவரி 11ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை சீனர்களின் லூனார் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான சீனர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள். நாட்டிற்குள்ளேயே வெவ்வேறு வேறு மாகாணங்களில் பணி செய்பவர்களும் தங்களது சொந்த ஊர் திரும்புவர். இதனால் அங்கு புத்தாண்டு கொண்டாட்டம் எப்போதும் களை கட்டும்.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டாலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு லட்சக்கணக்கான சீனர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பியதே கொரோனா பரவியதற்கான பிரதான காரணமாகும். கடந்த ஆண்டும் ஜனவரியில் தான் அங்கு நோய் தொற்று பரவல் வேகம் அதிகமெடுத்தது. இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்க இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகின்றது. எனவே லூனார் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிகம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படலாம் என்பதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சீனா எடுத்து வருகிறது.