சென்னை: சென்னையை சேர்ந்த பள்ளி மாணவிகள் உள்பட 3 பேர் செங்கல்பட்டு அருகே கல் குவாரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை வண்ணாரப்பேட்டை மொட்டைத் தோட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மனைவி தில்ஷத் (40). இவர்களது மகள் யாஸ்மின் பரிதா (17). சென்னை எம்எம்டிஏ பகுதியை சேர்ந்தவர் தேவிபிரசாத். இவரது மகள் சம்யுக்தா (17). தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சிவக்குமார் மகள் ஏஞ்சல் (17). நெருங்கிய தோழிகளான மூன்று பேரும் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தனர்.இந்நிலையில், பள்ளி விடுமுறை காரணமாக, இவர்கள் நேற்று யாஸ்மின் பரிதாவின் தாய் தில்ஷாத், அவரது மாமா தமிம் அன்சாரி (25) ஆகியோருடன் வாடகை காரை எடுத்துக்கொண்டு செங்கல்பட்டு அருகே உள்ள காந்தலூர் வந்தனர்.