பொங்கல் பரிசு தொகுப்பை ஜன.,25ம் தேதி வரை பெறலாம்; அரசு அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500, வழங்கும் திட்டத்தை கடந்த 20ம்தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.2,500 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் கடந்த 4ம் தேதி முதல் வழங்கப்பட்டது. இதை வாங்க முடியாதவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இதற்கான தேதியை வரும் 25ம்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள் நேற்று முதல் 25ம் தேதி வரை பெற்று கொள்ளலாம். அதன்படி விடுபட்டவர்களுக்கு நேற்று காலை முதல் விநியோகம் தொடங்கியது. வாங்காதவர்கள் தங்களுக்கான நியாய விலை கடைகளை அணுகி பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்று வருகின்றனர். கடந்த 4 முதல் 13ம் தேதி வரை 2.02 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் விடுபட்டவர்களுக்கு நேற்று காலை முதல் வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories: