அகமதாபாத்: நாட்டில் 27 நகரங்களில் சுமார் 1000 கி.மீ. தூர மெட்ரோ பணிகள் நடந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் சூரத் மெட்ரோ ரயில் திட்டம், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாவது கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் விழாவில் கலந்து கொண்டு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘நவீன சிந்தனை மற்றும் கொள்கை இல்லாத ஒரு காலம் நமது நாட்டில் இருந்தது. இதன் எதிரொலியாக ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு மெட்ரோ ரயில் சேவை இருந்தது.
முந்தைய அரசு மற்றும் எனது அரசிற்கு இடையேயான உள்ள வித்தியாசமான அணுமுமுறையால் தற்போது நாட்டில் மெட்ரோ ரயில் சேவை அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டுக்கு முன் 10 ஆண்டுகளாக 225கி.மீ. மெட்ரோ தடங்கள் மட்டுமே இயக்கப்பட்டது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 450 கி.மீ. மெட்ரோ தூர மெட்ரோ சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. சூரத் மெட்ரோரயில், அகமதாபாத் மெட்ரோரயில் திட்டம் ஆகியவை இரண்டு பிரதான வர்த்தக நகரங்களின்இணைப்பை மேலும் வலுப்படுத்தும்” என்றார்.