ரூ.1 கோடி தங்கம் கடத்தல்: வாலிபர் அதிரடி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் வழியாக துபாய், குவைத், பக்ரைன் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்த விமான நிலையங்களில் சுங்க இலாகா, வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர். ஆனாலும் பல்வேறு நூதன உத்திகளை கையாண்டு பலரும் தங்கத்தை கடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து ஏர் இந்திய விமானம் திருவனந்தபுரம் வந்தது.

அதில் இருந்த பயணிகளிடம் சுங்க இலாகா நுண்ணறிவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பயணி ஒருவர் தனது 2 கைகளிலும் தலா 1.80 கிலோ வீதம் மொத்தம் 3.60 கிலோ தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பயணியிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் வயநாடு பகுதியை சேர்ந்த முகமது (43) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை  கைது செய்தனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.

Related Stories: