மாஸ்கோ: ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரும், அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வருவோருமான அலெக்ஸி நாவல்னி சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மர்மநபர்களால் விஷம் கொடுக்கப்பட்டு சுயநினைவை இழந்த அலெக்ஸி நாவல்னி, ஜெர்மனி தலைநகர் பெர்னலில் சிகிச்சை பெற்றிருந்தார். தீவிர சிகிச்சையால் குணமடைந்த அவர், நேற்று நாடு திரும்பினார். அப்போது மாஸ்கோ விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த ரஷ்ய போலீசார் அலெக்ஸியை கைது செய்தனர்.
அச்சமயம் அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அலெக்ஸி, நீதிமன்ற விசாரணை நடக்கும் வரை காவலில் வைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் 2014ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட தண்டனையின் ஜாமின் நடைமுறைகளை மீறினார் என்பது குற்றச்சாட்டாகும். ஆனால் இது பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் டோம்ஸ் நகர விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அலெக்ஸிக்கு மர்மநபர் ஒருவரால் தேநீரில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டது. இதனால் சுயநினைவை இழந்த அவர், ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வந்தார். அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதால் அலெக்ஸி கண்ணில் வேதிப்பொருள் தூவப்பட்டது உள்ளிட்ட பல்வேறு தாக்குதலுக்கு ஆளானார். இவரது கைதால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.