ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் பதவியை ராஜினாமா செய்து விட்டு எந்த கட்சியிலும் இணையலாம்: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அறிக்கை

சென்னை: ரஜினி ரசிகர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம் என ரஜினி ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு பிற கட்சியில் சேரலாம் என ரஜினி மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவித்துள்ளார். அவர்கள் எந்த கட்சியில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக் கூடாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 4 மாவட்ட செயலாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனீ, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கவில்லை என கடந்த டிசம்பர் 29-ம் தேதி அறிவித்தார். மருத்துவர்களின் அறிவுரைகளை ஏற்று நான் கட்சி தொடங்கவில்லை என அறிவித்திருந்தார். இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எனவே ரஜினி கட்சி தொடங்க வேண்டும் என்று பலர் அவரது இல்லம் முன்பு போராட்டங்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: