×

என்ன பிரசாரம் செய்தாலும், குட்டிகரணம் அடித்தாலும் அதிமுக எதிர்கட்சியாக கூட வர முடியாது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை - அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேமுதிகவைச் சேர்ந்த 3000த்திற்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி இந்த நாட்டையே குட்டிச்சுவராக்கி இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு, ஒரு பொய்யான பிரச்சாரத்தை, ஆட்சியில் இருக்கக்கூடிய அதிமுக செய்து கொண்டிருக்கிறது.

அரசின் சார்பில் விளம்பரங்களைப் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் கட்சியின் சார்பில் கொடுத்தால் நாம் கேள்வி எழுப்பப் போவதில்லை. கட்சியின் சார்பாக என்ன வேண்டுமானாலும் விளம்பரம் செய்து கொள்ளட்டும். ஆனால் அரசின் செலவில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கென கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு விளம்பரம் செய்ய முடியாது. எனவே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே திட்டமிட்டு மக்களை எப்படியாவது மயக்கி விட வேண்டும் - ஏமாற்றி விட வேண்டும் என்பதற்காக, மக்களின் வரிப்பணமாக இருக்கக் கூடிய அரசுப் பணத்தைச் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.  

சி-வோட்டர் என்ற அமைப்பு ஒரு 22 மாநிலங்களில் எடுத்த கருத்துக் கணிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் முதல்வர் பழனிசாமி இருக்கக்கூடிய நம்முடைய தமிழகம் 19வது மாநிலமாக இடம் பெற்றிருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் நவீன் பட்நாயக்  சிறப்பாகச் செயல்படுகிறார் என்று 78 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பழனிசாமியின் ஆட்சியை எதிர்த்து 70 விழுக்காடு மக்கள் வாக்களித்துள்ளார்கள். இதையெல்லாம் மூடி மறைத்து இன்றைக்கு இருக்கும் இந்த ஆட்சி தவறான பிரச்சாரங்களைச் செய்து கொண்டிருக்கிறது.

நீங்கள் என்னதான் பிரச்சாரம் செய்தாலும் குட்டிக்கரணம் போட்டாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆட்சிக்கு அல்ல எதிர்க்கட்சியாகக் கூட நீங்கள் வர முடியாத சூழல் தான் நிலவுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, எதிர்வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தேன். இப்போது நாம் மக்கள் கிராமசபைக் கூட்டங்களை உற்சாகத்துடன் நடத்தி, மக்களைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறோம். மக்களின் மனநிலையை பார்க்கும்போது, 234-க்கு 234 இடங்களையும் நாம் பெறுவோம் என்ற நம்பிக்கை வருகிறது. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை.

இந்தச் சூழலில்தான் நீங்களெல்லாம் தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் வந்து இணைந்து இருக்கிறீர்கள். எதிர்வரும் தேர்தலில் நீங்கள்தான் பிரச்சார பீரங்கிகளாக இருந்து இந்த ஆட்சியினுடைய அக்கிரமங்களையெல்லாம் சுட்டிக்காட்டி, திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். தலைவர் கலைஞர் 5 முறை ஆட்சியில் இருந்தார். அப்போது அவர் என்ன சாதனைகளை எல்லாம் செய்தார் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதனையெல்லாம் மனதில் வைத்து நீங்கள் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நமது தாய்மார்கள் நகைகளை அடமானம் வைத்திருக்கிறார்கள். அவற்றை மீட்க முடியவில்லை.

அதற்கான வட்டிக்கு வட்டி ஏறிக்கொண்டு இருக்கிறது. அதனால் தான் 5 சவரன் வரையிலான அந்தக் கூட்டுறவு நகைக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று நாடாளுமன்றத் தேர்தலின்போது அறிவித்தேன். அதனை இப்போதும் நினைவுபடுத்த விரும்புகிறேன். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடனை ரத்து செய்வோம் என்று சொல்லியிருந்தேன். அதனை இப்போதும் சொல்கிறேன். திமுக ஆட்சியில் எல்லோருக்கும் வழங்கப்பட்டு கொண்டிருந்த முதியோர் உதவித்தொகைத் இப்போது சரியாக வழங்கப்படுவதில்லை, கட்சிப் பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று மக்கள் சொல்கிறார்கள். திமுக ஆட்சி அமைந்தவுடன் கட்சிப் பாகுபாடின்றி முதியவர்களுக்கு அந்த உதவித் தொகை வழங்கப்படும் என்பதையும் அறிவித்து இருக்கிறேன். இதையெல்லாம் உங்களிடம் சொல்வதற்குக் காரணம் இதனை நீங்கள் உங்கள் குடும்பத்தினர் உறவினர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் என அனைவரிடமும் எடுத்துச் சொல்லி கழகம் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags : MK Stalin ,AIADMK , AIADMK leader MK Stalin's speech:
× RELATED இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு...