கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதாரத்துறை பணியாளர்கள் தயக்கம்: விழிப்புணர்வு பணி தொடர முடிவு

சென்னை: இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதியளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 2,850 இடங்களில் 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்படவுள்ளது. முதல்கட்டமாக 166 மையங்களில் தடுப்பூசி போடும் பணி 16ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இணையத்தில் பதிவு செய்த பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ள சுகாதார பணியாளர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து மையங்களிலும் தினசரி 100 பேருக்கு தடுப்பூசி போடலாம். பெரும்பாலான மையங்களில் தினசரி ஒவ்வொரு மையத்திலும் 50 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகின்றனர். மேலும் சில மையங்களில் 30 முதல் 40 பேர் மட்டுமே வருகின்றனர். ஒவ்வொரு மையத்திலும் இரண்டு மணி நேரத்திற்கு 25 பேர் வீதம் தினசரி 100 பேருக்கு தடுப்பூசி போடலாம். எனவே தடுப்பூசி தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: