சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பார்வையிட்டார். இதுதொடர்பாக, முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு: இன்று (நேற்று) நான் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் கோவிட் தடுப்பூசி போடும் மையத்தை பார்வையிட்டேன். மருத்துவ பணியாளர்கள் நம்பிக்கையுடன் தடுப்பூசி போட்டுக் கொள்வதை கண்டேன். எந்தவிதமான அசாதாரண நிகழ்வுகளும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஏற்படவில்லை.. கோவிட் தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் பரப்பினால் தமிழ்நாடு அரசு கண்டிப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.