ஆந்திராவில் மதம் மாற்றத்தில் ஈடுபட்டு கோயில்களை திட்டமிட்டு சேதப்படுத்திய பாதிரியார்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

திருமலை: ஆந்திராவில் கோயில்களை திட்டமிட்டு சேதப்படுத்திய பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை ஆண்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இந்து கோயில்களில் இருக்கும் சிலைகள், கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் உச்சகட்டமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ராமதீர்த்தம் கோதண்டராமர் சிலையின் தலை உடைக்கப்பட்டு வேறொரு இடத்தில் வீசப்பட்டது. இது குறித்து சிஐடி விசாரணை நடத்த ஜெகன் உத்தரவிட்டார். அவர்களது செய்தனர். இந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடாவை சேர்ந்த பாதிரியார் சக்ரவர்த்தி என்கிற பிரவீன் சக்ரவர்த்தியை காக்கிநாடா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் ‘காசிப்’ எனும் யூடியூப் சேனலில் சக்ரவர்த்தி சில நாட்களாக தொடர்ந்து பேசி வந்தார். அந்த வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. ‘சைலோம் பார்வையற்றோர் மையம்’ என்ற பெயரில் கிறிஸ்தவ அமைப்பை நடத்தி வரும் அவர், தன் மூலம் வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று மதமாற்ற செயல்களில் ஈடுபட்டார். இவர் தானும் தனது சக மத போதகர்களும் ஆந்திராவில் பிற மதத்தினரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி வருவதாகவும், அவ்வாறு ஒரு கிராமத்தில் உள்ள அனைவரையுமே மாற்றி விட்டால் அதற்கு ‘கிறிஸ்து கிராமம்’ என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், அங்குள்ள மக்களை மதம் மாற்றிய பிறகு அங்கு குடியிருப்பில் உள்ள கோயில்கள் மற்றும் சிலைகளை காலால் எட்டி உதைத்து அவர்களையும் உதைக்க சொல்வதாகவும் பெருமையாக பேசி இருந்தார். இந்த வருடம் வெளிநாட்டு நன்கொடையாளரிடம் பிரவீன் பேசும் வீடியோ வெளியானது. அதில், தன்னுடன் 3,642 மத போதகர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், இதுவரை 699 ‘கிறிஸ்து கிராமங்களை’ ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து சிங்கம் லட்சுமி நாராயணா என்பவர் அளித்த புகாரின் பேரில், சிஐடி போலீசார் பிரவீனை கைது செய்தனர். கோயில்களை சேதப்படுத்தியதில் பாதிரியார்களுக்கு உள்ள தொடர்புகள், மதமாற்றம் செய்யப்பட்ட கிராமங்கள் குறித்து போலீசிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories: