மதுரை: பெங்களூரூவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சிவசங்கரி என்பவருக்கும், மதுரை பாலரெங்காபுரம் சரவணன் என்பவருக்கும் மதுரையில் நேற்று திருமணம் நடந்தது. விழாவில், மொய் எழுதுபவர்கள் டிஜிட்டல் முறையில் ‘போன் பே, கூகுள் பே’ மூலம் மொபைல் ஸ்கேன் மூலம் ஆன்லைனில் மொய் செய்யும் வகையில் க்யூ.ஆர் கோடுடன் கூடிய பத்திரிகையை வைத்திருந்தனர். திருமணத்திற்கு வந்தவர்களில் சிலர் தங்களது மொய் தொகையை கூகுள் பே மூலமாக செலுத்தி சென்றனர். ‘‘கொரோனா கால முன்னெச்சரிக்கையாக டிஜிட்டல் பரிவர்த்தனையை முன்னெடுத்துள்ளோம். நேரில் வந்து மொய் செலுத்த முடியாதவர்கள் கூகுள் பே, போன் பே மூலமாக செலுத்தலாம்’’ என மணப்பெண் சிவசங்கரி தெரிவித்தார்.