காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பார்வேட்டை உற்சவம் ரத்து செய்யப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், ஆண்டு தோறும் காணும் பொங்கலன்று, பார்வேட்டை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த உற்சவத்தின்போது, ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திம்மசமுத்திரத்தில் உள்ள திரிபுராந்தகேஸ்வரர் கோயிலுக்கு ஊர்வலமாக செல்வார். அப்போது வழியெங்கும் சுவாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். மேலும் பக்தர்கள் மாவில்கோலமிட்டு வரவேற்பு அளிப்பார்கள். மாலையில், பொதுமக்கள் தரிசனத்திற்கு பின், திம்மசமுத்திரம் கிராமத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு, நள்ளிரவு ஏகாம்பரநாதர் கோவிலை வந்தடைவார்.